சிறுமியிடம் அத்துமீறிய வழக்கு: பம்பாய் உயர் நீதிமன்றம் போக்சோ சட்டப்படி தண்டனை அளிக்காதது ஏன்?

சிறாரிடம் வக்கிரமாக அத்துமீறினாலும், நேரடியாக தொடாத பட்சத்தில், அதற்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை இல்லை என்றுள்ளது பம்பாய் உயர் நீதிமன்றம்.

நேரடியாக ‘மேனிக்கு மேனி’ தொடர்பில்லாத பட்சத்தில், 18 வயதின் கீழ் உள்ள பிள்ளையை தகாத நோக்குடன் அத்துமீறித் தொட்டாலும் அதற்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கமுடியாது என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஜனவரி 24ஆம் தேதியை இந்தியாவின் தேசிய பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் பட்டு வந்த தருணத்தில் வெளியான இந்தச் செய்தி, நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ (POCSO) சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, நேரடியான ‘ஸ்கின்-டு-ஸ்கின்’, அதாவது ‘மேனிக்கு மேனி’ தொடர்பில்லாத பட்சத்தில், 18 வயதின் கீழ் உள்ள பிள்ளையை மார்பகப் பகுதிகளில் தீண்டுதல் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

துணியை விலக்காமல் ஆபாசமாக தீண்டி துன்புறுத்துவது போன்ற சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகக்கூடும் என்று நாடளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

என்ன நிகழ்ந்தது

கடந்த டிசம்பர் 2016-இல் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 12 வயது சிறுமியிடம் தகாத நோக்குடன் அத்துமீறிய குற்றத்திற்காக 39 வயது சதிஷ் என்பவருக்கு அமர்வு நீதிமன்றம் எனப்படும் செஷன்ஸ் கோர்ட் (Sessions Court), பிரிவு 363 (சட்டவிரோதமாக கடத்துதல்) and பிரிவு 342 (சட்டவிரோதமாக அடைத்துவைத்தல்) மற்றும் போக்சோ (POCSO) சட்டங்களின்படி மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

இதைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து சதிஷ் தரப்பினர் மேல்முறையீடு செய்து, வழக்கு பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சின் பார்வைக்கு எடுத்து வரப்பட்டது.

இந்த முறையீட்டை தொடர்ந்து, பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, கடந்த ஜனவரி 19 ம் தேதி அன்று வழங்கிய தீர்ப்பில், “பாலியல் நோக்குடன் நேரடியான ‘ஸ்கின்-டு-ஸ்கின்’, அதாவது உடல்-மேல்-உடல் (அ) ‘மேனிக்கு மேனி’ தொடர்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே அதனை போக்சோ (POCSO) சட்டத்தின் வரையறைக்கு உட்பட்ட குற்றம் என்று கொள்ள வேண்டும்” என்று விளக்கி இருக்கிறார்.

வெறுமனே தீண்டுவது பாலியல் வன்கொடுமையின் வரையறையின் கீழ் வராது என்று அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதன்படி, அமர்வு நீதிமன்றம், 12 வயது சிறுமியை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதற்காக விதித்த மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை உத்தரவை மாற்றியமைத்துள்ளார், நீதிபதி கனேடிவாலா.

வழக்கின் பின்னணி

அரசு தரப்பு ப்ராசெக்யூஷனின் வாதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியத்தின்படி, 2016 டிசம்பரில், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்பவர், சம்பந்தப்பட்ட சிறுமியை நாக்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவளது மார்பகத்தை அத்துமீறி தீண்டியதுடன், அவளது ஆடைகளையும் அகற்ற முயன்றதாக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை என்று தீர்ப்பானது.

ஆனால், மேல்முறையீட்டின் பெயரில் வழக்கை மறுவிசாரணை செய்த நீதிபதி கனேடிவாலா, குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட சிறுமியை ஆடைகளை அகற்றாமல் தீண்டியதால், குற்றத்தை பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்றும், அதற்கு பதிலாக, ஒரு பெண்ணை மானபங்கம் செய்த குற்றமாக அதைக் கருதி ஐபிசி (IPC) பிரிவு 354இன் கீழ் மட்டுமே தண்டனை வழங்க இயலும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளார்.

தண்டனை குறைப்பு

இதன் விளைவாக, பம்பாய் உயர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நபரை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பையொத்து போக்ஸோ சட்டத்தின்படி அவர் பெற இருந்த மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனையில் இருந்து விடுவித்து, வெறும் ஐபிசி பிரிவு 354 இன் கீழ் ஓர் ஆண்டுகால சிறைத்தண்டனையை மட்டும் உறுதி செய்துள்ளது.

“இழைக்கப்பட்ட குற்றத்திற்கான போக்சோ-இன் கீழ் வழங்கப்பட இருந்த தண்டனையின் கடுமையான தன்மையைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது, நீதிமன்றத்திற்கு இன்னும் கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் வலுவான ஆதாரங்கள் தேவை” என்று பம்பாய் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கடும் விமர்சனம்

இந்த தீர்ப்பு சமூக செயற்பாட்டளார்களிடமிருந்தும் பொது மக்களிடம் இருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட வண்ணம் உள்ளது. ஆபாசமாக பேசிச் சிறாரை துன்புறுத்தல் மற்றும் நேரடியாக ‘ஸ்கின்-டு-ஸ்கின்’ அதாவது மேனிக்கு மேல் நேரடியாகத் தொடாமல், துணியை விலக்காமல் ஆபாசமாக தீண்டி துன்புறுத்துவது போன்ற சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.

மேலும், இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி வருங்காலத்தில் இது போன்ற குற்றங்களை சிறார்கள் மீது நிகழ்த்தும் நபர்கள் குறைந்த பட்ச தண்டனையுடன் நழுவிக் கொள்ளும் வாய்ப்பையும் இந்த முடிவு ஏற்படுத்தி உள்ளது என்ற கருத்தும் முன்வைக்கப் பட்டுள்ளது.

போக்சோ (POCSO) சட்டம் குறித்து இங்கே அறிந்து கொள்ளவும்.

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,875 Views
All Categories