அவளுக்கு உணர்த்துங்கள், அவள் அக்னிப் பிழம்பென.

பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்ணை மனதளவில் உறுதிப்படுத்தி, அவள் அக்னிப் பிழம்பென நினைவுப் படுத்தினால், அவள் மீண்டு எழுவது சாத்தியமாகும்.

எந்தப் பாவமும் செய்யாவிட்டாலும், பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண், களங்கப்பட்டவளாகவே அறியப்படுவது வேதனை. நோகடிக்கப் பட்டவளை மனதளவில் உறுதிப்படுத்தினால், அவள் அக்னிப் பிழம்பென நினைவுப் படுத்தினால், அவள் மீண்டு எழுவது சாத்தியமாகும்.

அக்னிப் பிழம்பிற்கு ஏது சுத்த அசுத்தம், களங்கம்?
சீதைகள் தீக்குளிக்க வேண்டாம்.
தீயாகவே மாறட்டும்.

அவளுக்கு உணர்த்துங்கள்
அவள் அக்னிப் பிழம்பென.

கூடாத எண்ணம் கொண்டு அணைப்பவர் விரல்களும்
வாய்பொத்தி வஞ்சிப்பவரின் உமிழ்நீர் கறைகளும்
அவளை அழுக்காய் அறிவிக்காதென.

பாவங்களை பஸ்பமாக்கும் அவள் மெய்நிலையை
அவளுக்கு அறிவியுங்கள்.

வேதனையின் எச்சங்கள்
அவளைக் கனவில் துரத்தினால்
அவள் அரண்டு கதறினால்
அவளிடம் சொல்லுங்கள்
அவள் அக்னிப் பிழம்பென.

இனிவரும் காலங்களிலும்
பொல்லாத நாக்கள் சில
அவளை சாடை பேசக்கூடும்.
அவ்வேளையிலும் நினைவூட்டுங்கள்-
அவள் அக்னிப் பிழம்பென.

பட ஆதாரம்: Pexels.com

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 63,013 Views
All Categories