இது தாயுள்ளம் சொல்லும் சந்தம், என் செல்லமே!

"செல்லமே! அன்னை என்று என்னை அலங்கரித்த உனக்கு நன்றியடி!" என தேன் தமிழில் தாயுள்ளம் பகிர்ந்து கொள்கிறார், ரம்யா.

“செல்லமே! அன்னை என்று என்னை அலங்கரித்த உனக்கு நன்றியடி!” என தேன் தமிழில் தாயுள்ளம் பகிர்ந்து கொள்கிறார், ரம்யா.

உன்னைக் காண காத்திருந்த அந்த தருணங்கள்
கண்களின் ஈரம் கூட மறந்துபோன நிமிடங்கள்
உன் முதல் துடிப்பு உணர்ந்த அந்த நொடி
நம் தொலை தூரப் பயணத்தின் முதல் படி

வெள்ளைப் பூக்களும் வர்ணமாய் தோன்றியதே
சூரிய வெப்பமும் குளுமையாய் மாறியதே
புதிதாய் பல எண்ணங்கள் தானாய் முளைத்ததே
கனவுகளில் உன் சிரிப்பொலி காற்றில் சிதறியதே

உன் பாதங்கள் சிறிதாய் சீண்ட, பெரிதாய் மகிழ்ந்தேனே
உன் அசைவுகள் பெருக, உறைந்து நான் நின்றேனே
வியக்கத்தகும் வகையில் மாற்றங்களை என்னுள் கண்டேனே
கைகளில் உன்னை ஏந்தும் நாள் வருகிறதென்று அறிந்தேனே

இமைக்கும் நேரத்தில் வலி என்னை சூழ்ந்துகொள்ள
சீறிக்கொண்டு சீக்கிரம் வந்துவிடு இவ்வுலகை ஆள
சுற்றிலும் இருள், அதில் நினைவுகள் எங்கோ செல்ல
ஓங்கி ஒலித்த உன் அழுகை உடனே என்னை வெல்ல

தவமிருந்த தருணம் இதோ! நீ என் கைகளில் சிணுங்கியபடி
அன்னை என்று என்னை அலங்கரித்த உனக்கு நன்றியடி!

பட ஆதாரம்: ’24’ திரைப்படம்

About the Author

13 Posts | 16,899 Views
All Categories