மாதவிடாய் காலத்தில் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் பாதிப்பு ஏற்படுமா?

மாதவிடாய் காலத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து பல வதந்திகளும், கேள்விகளும் வலம் வரும் இந்தச் சூழலில், பதில்கள் சில, இதோ.

மாதவிடாய் காலத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து பல வதந்திகளும், கேள்விகளும் இணையத்தில் வம் வரும் இந்தச் சூழலில், சில முக்கியமான கேள்விகளுக்கான பதில்கள் இதோ.

கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலில் நோயினால் தாக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறம், உயிர்வளி எனப்படும் ஆக்சிஜென் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாமை, உயிர் பேணும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு என்று மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து வருகிறோம்.

Original in English | மொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

இந்த காலகட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இந்திய அரசின் தடுப்பூசித் திட்டம் எனப்படும் ‘வாக்சினேஷன் ப்ரோக்ராம்’, நோயிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், மேற்கொண்டு கொரோனா பரவாமல் இருப்பதற்கும் அவசியமான ஒரு முன்னெடுப்பாகும்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பான சில வதந்திகள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் உங்கள் பார்வைக்காக இங்கே பகிரப்பட்டுள்ளன.

மாதவிடாய் காலத்தின் போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? அது பாதுகாப்பானதா?

மாதவிடாயின் போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு சுத்தமாக பக்கவிளைவுகளே இருக்காது என்று கூற இயலாது.

பொதுவாகவே தடுப்பூசியை போட்டுக் கொண்டால் காய்ச்சல் வருவது புதிதல்ல. அதன் தன்மை நபருக்கு நபர் வேறுபடும்.

ஆகவே மாதவிடாயின் போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுள் ஒரு சிலருக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகலாம், வேறு சிலருக்கு எந்த மாற்றமும் இன்றி வழக்கமான அளவே உதிரப்போக்கு இருக்கலாம். மருத்துவரீதியாக, இந்த மாற்றம், அவரவர் உடலில், வைரஸ்-க்கு எதிரான போதுமான அளவு எதிர்ப்புசக்தி உருவாகும் கட்டத்தில் ஏற்படும் ஒரு குறுகிய கால பக்கவிளைவு மட்டுமே என்று மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

மாதவிடாயின் போது இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் குறிப்பிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் என்று சொல்லும்படியாக மருத்துவப்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

மேலும், இந்த தடுப்பூசியால் பெண்களின் கருவுறும் தன்மைக்கோ மாதவிடாய் சுழற்சிக்கோ எவ்வித நீண்டகால பாதிப்பும் ஏற்படும் என்பதும் நிரூபிக்கப் படவில்லை.

‘வதந்திகளை நம்ப வேண்டாம்; தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துகின்றனர், இந்திய மருத்துவர்கள்

கோவிட் தடுப்பூசி தொடர்பான சில நியாயமான நடைமுறை சந்தேகங்களுடன், ஏகப்பட்ட வதந்திகளும் இணையத்தில் வலம் வருகின்றன. இவற்றில் வதந்திகளை இனங்கண்டு தரம்பிரித்து ஒதுக்கி விடவேண்டும். இப்படிப்பட்ட வதந்திகளுள் ஒரு பகுதி தான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதிவுகள்.

இது போன்ற கோவிட் தடுப்பூசி, அதன் பக்கவிளைவுகள் குறித்த ஆதாரமில்லாத செய்திகள், குழப்பத்தையும் தேவையில்லாத பயத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.

இத்தகைய சூழலில் இந்திய அரசாங்கமே முன்வந்து இவை வெறும் வதந்திகள் என்றும் இவற்றை நம்ப வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவது அவசியம் என்றும் அறிவித்துள்ளது.

“பெண்கள் மாதவிடாய் நாட்களுக்கு ஐந்து நாட்கள் முன்னும் பின்னும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது என்ற ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. இது போன்ற பொய்யான வதந்திகளை நம்பாதீர்! 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 க்குப் பிறகு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கான பதிவு ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் cowin.gov.in இல் தொடங்குகிறது” என்கிறது, அரசுத் தரப்பு தகவல்களை வெளியிடும் ‘பிரஸ் இன்பர்மேஷன் பீரோ’ வெளியிட்டுள்ள சமீபத்திய ‘ட்வீட்’ அறிக்கை.

இதையே மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வதந்திகள் ஆதாரமற்றவை என்றும் இவற்றை உறுதிப்படுத்தும் மருத்துவப்பூர்வமான விளக்கங்கள் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். மும்பையைச் சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவரான டாக்டர். முஞ்சால் வி. கபாடியா அவர்கள், இவை வெறும் வதந்தியே என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

“என்னிடம் பலர் ‘மாதவிடாயின் போது இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது பாதுகாப்பானது தானா? இதனால் பாதிப்புகள் ஏற்படுமா?’ என்று கேட்டு வருகின்றனர். இது ஒரு பொய்யான வாட்ஸாப் வதந்தி, அவ்வளவே. கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் மாதவிடாய்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தயவு செய்து அனைவரும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்”, என்று தனது ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்த அடுத்த ஒரு ட்வீட்டில் அவர், “இந்த வதந்திகள், பெண்களின் மத்தியில் தடுப்பூசியை அணுகுவதற்கே தயங்கும்படியான ஒருவித மனநிலையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டு பயந்துவிடாமல், தயங்காமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பட ஆதாரம்: YouTube

உங்கள் மருத்துவரை அணுகி இது தொடர்பான தகவல்களை கேட்டு, தெரிந்து கொள்ளவும்.

About the Author

Kamalika

A postgraduate student of Political Science at Presidency University, Kolkata. Describes herself as an intersectional feminist and an avid reader when she's not busy telling people about her cats. Adores walking around and exploring read more...

2 Posts | 2,797 Views
All Categories