பெண்மை போற்றுதும்!

'சங்குக் கழுத்தென்பது சங்கிலிகளுக்கானது மட்டுமல்ல குரலெடுத்து முழங்கும் சங்காகும் ஒடுக்குமுறை கண்டு' என்றே பெண்மை போற்றுவோம்!

‘சங்குக் கழுத்தென்பது சங்கிலிகளுக்கானது மட்டுமல்ல குரலெடுத்து முழங்கும் சங்காகும் ஒடுக்குமுறை கண்டு’ என்று பெண்மை போற்றி அலங்கார பிம்பங்களை தமிழால் உடைக்கிறார், நம் வாசகி ராணி ஷண்முகம்.

அழுது சேலை வாங்கி
சிரித்து செருப்பு வாங்கும்
புற அழகுப் பதுமைகள்
நாங்களில்லை.

கண்ணுக்கு மை அழகென்கிறீர்
ஆகட்டும்;
ஆனால்
எங்கள் கருத்துக்கு மெய்யே அழகு.

வில் எங்கள் புருவம்
என்று புகழ்கிறீர்
இருந்தாலும் இல்லாவிட்டாலும்
அம்பெனப் பாய்வோம் அநீதி கண்டு.

பிறை நெற்றியில் நிலாப் பொட்டிடுவோம்
இணையிருந்தாலும் இல்லையென்றாலும்
அடையாளம் தேவையில்லை அன்னியருக்கு
எங்கள் மனப்புனிதம் மங்காது ஒரு நாளும்.

சங்குக் கழுத்தென்பது
சங்கிலிகளுக்கானது மட்டுமல்ல
குரலெடுத்து முழங்கும் சங்காகும்
ஒடுக்குமுறை கண்டு.

அன்பின் அமுதம்
பொங்கிப் பெருகும்
எங்கள் இதயம் தான்
ஆளுமைக்கும் இருப்பிடம்

அரவணைக்கும் கைகள்
அறத்தை மட்டுமே துதிக்கும்
செவ்வாழை கால்களென்றாலும்
ஏந்தித் தாங்கும், புவி போல்!

கொடியிடை என்றாலும்
இல்லையென்றாலும்
உயிர் தாங்கி உயிர்ப்பிக்கும்
பெண்மை போற்றுதும்!

பட ஆதாரம்: ‘அறம்’ திரைப்படம்

About the Author

1 Posts | 1,689 Views
All Categories