பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக் கூடிய வணிக வாய்ப்புகள்

பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக் கூடிய பிசினஸ் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. ஆடை வடிவமைப்பு போன்ற பிசினஸ்களை இனி நீங்களும் துவங்கலாம்!

பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக் கூடிய பிசினஸ் வாய்ப்புகள் பெருகி வருகின்றன! ஆடை வடிவமைப்பு போன்ற பிசினஸ்களை உங்கள் வீட்டிலிருந்தே நீங்களும் துவங்கலாம்! எப்படி என்று அறிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

உங்களுக்காகவே, குழந்தைகளுக்கான ஆடை வடிவமைப்பு சார்ந்த பிசினஸ்களை தங்கள் வீடுகளிலிருந்தே சுயேச்சையாக தொடங்கி வெற்றிகரமாக நிர்வகிக்கும் பெண்கள் சிலரது அனுபவங்கள், இங்கே பகிரப்பட்டுள்ளன.

இந்தியாவில் பல பெண்கள் திருமணம், தாய்மை ஆகியவை ஏற்படுத்தும் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக பணி சார்ந்தோ தொழில் சார்ந்தோ ஒரு இடைவெளியை (career break) எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்குப் பின் மீண்டும் வேலைக்கு திரும்பும்போது, தானே தனக்கு முதலாளி என்கிற திருப்தி, வேலை நேரம் சார்ந்த சுதந்திரம், போன்ற பல்வேறு காரணங்களுக்காக ‘தொழில்முனைவோர்’ என்ற புதிய பரிணாமத்தை அரவணைத்துக் கொள்கின்றனர்.

இவ் வகையில் பேக்கிங் (baking) போன்ற வீட்டு வணிக வாய்ப்புகளை பல பெண்கள் தேர்வு செய்கிறார்கள். இதைத் தாண்டி, சில பெண்கள் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு சார்ந்த வணிகங்களைத் தொடங்கி, திறம்பட நிர்வகித்து லாபகரமான பிசினஸ்களை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு குழந்தைகளுக்கான ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு சார்ந்த பிஸினஸ்களை நடத்தி வரும் பெண்கள் சிலர் தொழில்முனைவோர்களாக தங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துள்ளனர்.

வீட்டில் செய்யும் தையல் வேலைகள் எப்போதும் பெண்களிடையே பிரபலமாக இருந்திருக்கின்றன. அதை இந்த தொழில்முனைவோர்கள், பிசினஸ் ஆக அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருப்பது பரவசம் ஊட்டுகிறது!

‘வீட்டில் இருந்தே சர்வமும் தொடங்குகிறது’

லிட்டில் விமன்‘ என்று அழைக்கப்படும் ஆடை வடிவமைப்பு மற்றும் பிசினஸ், சௌம்யா தாமஸ், சுனிதா டோமினிக் மற்றும் மரியம்மா தாமஸ் ஆகிய மூன்று சகோதரிகளின் கனவு மற்றும் முயற்சியின் விளைவு! வீட்டில் ஐந்து பெண் குழந்தைகளில் ஒருவராய் வளர்ந்த சௌம்யா, தனது இளம்பிராயம், ‘தங்களது தாய் தங்கள் ஐவருக்கான ஆடைகளை வீட்டிலேயே தயாரித்த நினைவுகளால் நிறைந்த ஒன்று’ என்கிறார். “துணிகளும், தையல் மெஷின் சத்தமும், வண்ண வண்ண நூல்கண்டுகளும், பொத்தான்களுமாக நிறைந்த நாட்கள் அவை”, என்கிறார் சௌம்யா. இந்தச் சூழல் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கமே தங்களது பிஸினஸின் ஆரம்பப் புள்ளி என்கிறார்கள் இந்த சகோதரிகள்.

தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கான ஆடை வடிவமைப்பில் தொடங்கிய பணிகள், மெல்ல மெல்ல ஒரு ‘ஹோம் பிசினஸ்’ ஆக அதாவது ‘வீட்டில் இருந்தே நடத்தப்படும் வணிகமாக’ பரிணமித்தது. “பெண் குழந்தைகளுக்கு எங்கள் காலத்தில் நாங்கள் அணிந்தது போன்ற அழகான ஆடைகள் கிடைப்பது அரிதாகிக் கொண்டிருந்ததை பார்த்தோம். அதையே எங்கள் பிசினஸ் ஐடியாவாகக் கொண்டு இந்த வணிகத்தை தொடங்கினோம்” என்று திட நம்பிக்கையுடன் முழுமூச்சாக வேலையில் இறங்கி சாதித்து உள்ளனர் இந்த மூன்று சகோதரிகள்!

டெய்லரிங் பணிகளை மரியம்மா கவனித்துக் கொள்ள, (25 வருடங்களுக்கும் மேலாக இதை செய்து வரும் வித்தகி இவர்!) சுனிதா எம்ப்ராய்டரி வேலைகளையும் வீட்டு அலங்காரத்திற்கான ‘ஹோம் டெக்கோர்’ (home decor) பிசினஸ் தேவைகளையும் பார்த்துக் கொள்கிறார். இத்தனைக்கும் மூன்று சகோதரிகளும் மூன்று வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள்: சௌம்யா பெங்களூரிலும், மரியம்மா கேரளாவிலும் சுனிதா பஹ்ரைனிலும் உள்ளனர். வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு இந்த மூவரும் எப்படி சமாளிக்கிறார்கள்?

குழந்தைகளுக்கான ஆடைகளை பெரும்பாலும் பெங்களூருவிலோ கேரளாவிலோ வைத்துக்கொள்வதால், உரிய ஆர்டர்கள் வரும்போது அவற்றை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பிவைப்பது சாத்தியமாகிறது. குறைந்தபட்சம் 250 ரூபாய்-275 ரூபாய் என்ற அளவிலேயே குழந்தைகளுக்கான ஆடைகளுக்கு விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. “குறைந்த, நியாயமான விலையில் தரமான ஆடைகளை விற்பது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம்”, என்கிறார்கள் இந்த சகோதரிகள்.

ஏப்ரல் 12, 2012 அன்று ஃபேஸ்புக் வலைத்தளத்தில் தங்களுக்கென ஒரு பிரத்யேக பக்கத்துடன் அதிகாரபூர்வமாக துவங்கப்பட்ட ‘லிட்டில் விமென்’ ஆடை வியாபாரம், 1 ½ மாத காலத்திற்குள் தங்களது முதல் ஆர்டரை பெற்று வெற்றிகரமாக இயங்கத் துவங்கியது. தங்களது ஆடைகளுக்கு கிடைத்த வரவேற்பினால் பூரித்துப் போயிருக்கும் இந்த சகோதரிகள், தற்போது பெண்களின் ஆடைகள் மற்றும் வீடு அலங்கார உபகரணங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் வியாபாரத்திலும் ஈடுபட்டு அவற்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

Children's clothing designs from Little Women
சில ‘லிட்டில் விமென்’ ஆடைகள், உங்கள் பார்வைக்கு.

விதை விருட்சமான கதை: சிறு அறையில் துவங்கி இன்று வளர்ந்து நிற்கும் வணிகம்

பெங்களூரைச் சேர்ந்த ரேணுகா ஈஸ்வரன் மற்றும் ஷோபனா நந்தகுமார் ஆகிய இருவரும் பெருநிறுவனங்களில் பணிபுரிந்து வந்தவர்கள்; என்றாலும் சொந்த பிசினஸ் துவங்கவேண்டும் என்ற கனவு அவர்களுக்குள் இருந்தது. தன்னுடைய மகள் பயின்று வந்த ‘பாலே’ (ballet) நடனப்பள்ளியில், ஒரு பொது நண்பர் மூலமாக ஷோபனா ரேணுகாவிற்கு அறிமுகம் ஆனார். தற்செயலாக ஏற்பட்ட இந்த சந்திப்பின் விளைவாக உதித்ததே ‘மாப்பெட் ஐல்’ (Moppet Isle).

“பெண் குழந்தைகள் மேல் எங்கள் இருவருக்கும் உள்ள அலாதி பிரியமே ‘மாப்பெட் ஐல்’ உருவானதற்கான முதல் காரணம்,” என்கிறார், ரேணுகா. ஷோபனாவின் இளவயது மகளுக்கும், ரேணுகா வீட்டுக் குட்டிப்பெண்களுக்கும் ‘தரமான அழகான ஆடைகளை வாங்கி அணிவிக்க முடியவில்லையே’ என்ற த்தின் பின்னணியில் துவங்கப்பட்ட வெற்றிகரமான இந்த ஆன்லைன் பிசினஸ், குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகளை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

“நாங்கள் பார்த்த வரை ‘போட்டிக்’ (boutique) வகை கடைகளில் கூட பெண் குழந்தைகளுக்கான ஆடைகள், ‘ஜிகுஜிகு’வென்று ‘ஃப்ரில்கள்’ மிகுதியாக வைக்கப் பட்டவையாகவே இருந்தன உடுத்துவதற்கு எளிதான, உறுத்தல் இல்லாத அழகான, ‘ஸ்டைலிஷ்’ ஆடைகள் அரிதாகவே கிடைத்தன.” என்கிற ரேணுகாவும் ஷோபனாவும், அந்த ஆடைகளின் விளையும் மிக அதிகமாக இருந்ததாக குறிப்பிடுகின்றனர். மேலும், எல்லாப் பெரிய கடைகளிலும், மொத்தத் தயாரிப்பில் வெளிவரும் ஒரே மாதிரி டிசைன் ஆடைகளையே அவர்கள் கண்டனர்.
“நல்ல டிசைன்களுடன் கூடிய, அதிக பகட்டில்லாத அழகான ஆடைகளுக்கான தேவை உள்ளதை அந்த தருணத்தில் நாங்கள் உணர்ந்தோம்” என்கிறார்கள் இருவரும்.

ஜூன் 4, 2012 அன்று ஒரு பிரத்யேக ஃபேஸ்புக் பக்கத்துடன் துவங்கப்பட்ட ‘மாப்பெட் ஐல்’ , சில நாட்களிலேயே முதல் ஆர்டரை பெற்று சிறப்பாக இயங்க ஆரம்பித்தது.
“வீட்டில் இருந்தபடியே செய்யும் பிசினஸ் என்ற வகையில் ‘மாப்பெட் ஐல்’ நன்றாகவே நடக்கிறது”, என்கிறார் ரேணுகா.
ஆடை வணிகம் சார்ந்த ஷோபனாவின் பின்னணியும் இந்த ஆன்லைன் வணிகம் நன்றாக நடப்பதற்கு ஒரு காரணியாகும். துணிகளை வாங்கும் பொறுப்பினை ஷோபனா ஏற்றுக்கொள்ள, ஆடைகள் வடிவமைப்பில் இருவரது பங்கும் இணையாக இருந்து வருகிறது. பின்னர் இருவருமே நேரடியாக டெய்லரிடம் சென்று ஆடைகளை தைத்து வாங்கிக் கொள்கின்றனர்.

பெருநிறுவனங்கள், ‘மால்’களில் விற்கப்படும் ட்ரெஸ்கள் போன்று ஒரே மாதிரி டிசைன்கள் கொண்டில்லாமல், பிரத்யேகமான, தனித்துவமான டிசைன்களையே இவர்களது ஆடைகள் கொண்டிருப்பதால் பிசினஸ் நன்றாக நடப்பதாக சொல்கின்றனர் இருவரும். மேலும், பிரிண்டெட் சில்க், ஷிஃபான், ஜார்ஜெட், மற்றும் பருத்தி வகைத் துணிகளைக் கொண்டே வடிவமைக்கப்படும் ஆடைகள் என்பதால் ‘மாப்பெட் ஐல்’ ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும், “பாரம்பரிய உடைகளிலேயே அழகிய வித்தியாசங்களை புகுத்தி புதுமை செய்வதும் நல்ல வரவேற்பினை எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளது” என்றும் தெரிவிக்கின்றனர், இந்த பிசினஸ் மங்கைகள்.

Children's Dresses By Moppet
சில ‘மாப்பெட் ஐல்’ ஆடைகள், உங்கள் பார்வைக்கு.

‘பெட்டல்ஸ்’ பிறந்த கதை

மும்பையை சேர்ந்த ப்ரேரணா தொம்பரே, ஹோம் மேக்கராக இருந்தவர். “என்னுடைய இளம்பிராயம் முழுவதும் என்னுடைய பாட்டியும் அம்மாவும் அன்புடன் வீட்டில் தைத்துத் தந்த ஆடைகளையே நான் அணிந்து வந்தேன்” என்று விருப்பத்துடன் நினைவு கூர்கிறார், ப்ரேரணா. “என்னுடைய மகளுக்கு அந்த அரவணைப்பு கிடைக்கவில்லை என்று எப்போதும் தோன்றிக் கொண்டிருந்தது” என்கிற இவர், முதலில் மகளுக்காக தைக்கத் துவங்கினார். இவருடைய வேலைபாட்டையும் திறனையும் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இவர் ஆடை தைத்துக் கொடுக்கும்படி கேட்கவே, ‘பெட்டல்ஸ்‘ (Petals) ஒரு பிசினஸ் ஆக உருவெடுத்தது.

வீட்டிலிருந்து சிறிய அளவில் துவங்கப் பட்ட இந்த பிசினஸ், மே 6, 2012 அன்று ஒரு பிரத்யேக ஃபேஸ்புக் பக்கத்துடன் ஆன்லைன் வணிகமாக பரிணமித்தது. ஃபேஸ்புக் பக்கம் துவங்கிய 2-3 நாட்களிலேயே ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.

பிரத்யேகமான, தனித்துவமான டிசைன்களில் வரும் ‘பெட்டல்ஸ்’ பருத்தி ஆடைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தன்னை தொடர்ந்து ஊக்குவிப்பதாக சொல்லும் ப்ரேரணா, ‘ஆடைகளுக்கான சந்தையில் ‘பெட்டல்ஸ்’ தனக்கென ஒரு தனியிடத்தை எட்டிவிட்டது’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

Children's Dresses By Petals
‘பெட்டல்ஸ்’ வழங்கும் குழந்தைகளுக்கான ஆடைகள்

நீங்களும் வீட்டிலிருந்தே பிசினஸ் செய்யும் பெண்மணியா? உங்கள் வெற்றிக் கதையையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!

பட ஆதாரம்: க்ளாடியா அஸ்ஸாட் (கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்சினையொத்து பகிரப்பட்டுள்ளது)

About the Author

Melanie

Melanie Lobo is a freelance writer. She grew up in cities across India but now calls Pune home. Her husband and son keep her on her toes and inspire her with new writing material daily. read more...

2 Posts | 12,623 Views
All Categories